பயணிகளை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த இபோச பஸ் சாரதி!

இபோச பஸ் சாரதி ஒருவர், பஸ்ஸை செலுத்தி செல்கையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியே இவ்வாறு திடீர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த சாரதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே (வயது 41) என்பவர் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சாரதி கெட்டபுலா கடியலேஹின்ன பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் இவர் வழமையாக நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து (15) மாலை 03.10 மணியலவில் நாவலப்பிட்டியை நோக்கி பேரூந்தை செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்;தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பேரூந்ததை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பின் மாற்று வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாரதி பஸ்ஸை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என பணிகள் தெரிவித்துள்ளனர்.

-ஆ.ரமேஸ்-

Related Articles

Latest Articles