பூஜைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவரது ‘கை’ துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று, பதுளைப் பகுதியின் ஒலியாமண்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி துண்டிக்கப்பட்ட கையை, மீளவும், சம்மந்தப்பட்டவருக்கு பொறுத்த, பதுளை அரசினர் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ராஜரட்ணம் சத்யஜீவன் என்ற நபர், தோட்டத்தை விட்டு வெளியேறி, பதுளை ஒலியாமண்டி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சிவராத்திரி தினத்தில் இரவு பூஜை வழிபாட்டிற்குச் சென்று, ஆட்டோவொன்றில் ஒலியாமண்டியின் வாடகை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் காத்திருந்த ஐவர், குறிப்பிட்ட ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி, ராஜரட்ணம் சத்யஜீவனைப் பிடித்து, அவரது கையை வாலொன்றினால் துண்டித்து விட்டு, அவ் ஆட்டோவிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.
அதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவசர இலக்கத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, துண்டிக்கப்பட்ட கையுடன், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
துண்டிக்கப்பட்ட கையை, அந்நபருக்கு இணைக்க, பதுளை அரசினர் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நீண்டகாலமாக இருந்து வந்த தகராரே, இச் சம்பவத்திற்கு காரணமென்று ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பிரதேசத்தை விட்டு, தலைமறைவாகியுள்ளனரென்றும், விரைவில் இனம்காணப்பட்ட ஐவரும் கைது செய்யப்படுவரென்றும், பொலிசார் தெரிவித்தனர்.
பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவகுமார தலைமையிலான குழுவினர், மேற்படி சம்பவம் குறித்து, தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம். செல்வராஜா, பதுளை










