பெண்களுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர்,
“அரசியல் காரணங்களுக்காகப் பெண்களையோ அல்லது பிறரையோ இழிவாகப் பேசக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் உரிமையானது என்றாலும், அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் அவதூறுகளும் அருவருப்பான பேச்சுக்களும் பெருக்கெடுத்து ஓடுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
திரைத்துறையிலும், தற்போதைய அரசியல் வருகையிலும் தனது வெற்றிக்கு பெண்களே முக்கிய காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “இரட்டை மற்றும் மூன்று அர்த்தங்களில் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வீட்டிலிருக்கும் தாய் மற்றும் சகோதரிகளையும் நினைவில் கொண்டு, வார்த்தைகளைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. கடுமையான அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா குறித்து மறைமுகமாக வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சை கருத்துக்களைத் தொடர்ந்து முதலமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்துத் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜே. ஜெயலலிதா இதே சட்டமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.
அரசியல் லாபத்திற்காகப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதைத் தவிர்த்து, கண்ணியமான முறையில் உரையாடல்களை முன்வைக்க வேண்டும் என அவர் அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










