‘ மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்’ – ஜீவன் மீண்டும் உறுதி

” நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் சிலர் குறை காண்கின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாதுபோய்விடும் எனவும் விமர்சிக்கின்றனர். நாம் தொழிலாளர்களை பாதுகாப்போம். எனினும், சந்தா வாங்கும் சிலர் தொழிலாளர்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் எம்மால் முக்கியமான சில விடயங்களை நிறைவேற்றமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. மலையகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எமது இளைஞர்களும் நம்புகின்றனர். நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டாம். வீண் விமர்சனங்களை முன்வைப்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை.

கொரோனா தடுப்பூசி உட்பட பல திட்டங்கள் இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்தாலும் ஆயிரத்து எட்டு குறைகளை கூறுபவர்கள் இருக்கவே செய்கின்றனர்.எதுஎப்படி இருந்தாலும் எமது சேவைகள் தொடரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles