மலையகத்துக்கான இரு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

மலையகத்துக்கான இரண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையும் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையும் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த 1023, 1024 ஆகிய இலக்கங்களையுடைய இரு ரயில் சேவைகளும் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து சேவையிலிருந்து நிறுத்தப்படுவதாக ரயில் கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு ஆரம்பித்து, பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் ரயிலும் பகல் 12.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, இரவு 9.30 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்தை சென்றடையும் ரயில்களே இவ்வாறு நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்குச் செல்வதுடன், இவர்களுக்கு மேலதிகமாக பாடாலை மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இந்த ரயில் சேவைகளால் பயனடைந்து வந்தனர்.

எனினும் இந்த ரயில்கள் இரண்டையும் நிறுத்தி, குறித்த நேரத்தில் இரண்டு பெட்டிகளுடன் பொருள் விநியோக சேவையை அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles