இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான புதிய கொள்முதல் கட்டணங்களுக்கு (Feed-in Tariffs) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளதுடன், இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை (ஆகஸ்ட் 25) முதல் அமுலுக்கு வருகின்றன.
இந்த புதிய கட்டண முறைமையானது 2027 பிப்ரவரி 24 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்பதுடன், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், கூரைமீதான சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் மின்கல சக்தி சேமிப்பு அமைப்புகளை (BESS) உள்ளடக்கிய திட்டங்களுக்குப் பொருந்தும்.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழ் இந்த கட்டண முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறிய நீர்மின்சாரம், காற்று சக்தி, பயோமாஸ் (உயிரித்தொகுதி), நகராட்சி திடக்கழிவு, கழிவு வெப்ப மீட்பு, தரைமட்ட சூரிய மின்சாரம் மற்றும் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்குப் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, சிறிய நீர்மின்சாரத்திற்கு அலகு ஒன்றுக்கு ரூ. 30.37, காற்று சக்திக்கு ரூ. 20.80, தரைமட்ட சூரிய மின்சாரத்திற்கு ரூ. 18.00 மற்றும் மிதக்கும் சூரிய மின்சாரத்திற்கு ரூ. 23.58 என நிலையான கட்டணங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மின்கல சேமிப்பு அமைப்புகளுடன் (BESS) இணைக்கப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை நேரங்களில் கூடுதல் கட்டணங்கள் வழங்கப்படும்.
அத்துடன், கூரைமீதான சூரிய சக்தி கட்டமைப்புகளுக்கு 10kW வரையிலான திட்டங்களுக்கு அலகு ஒன்றுக்கு ரூ. 23.11 முதற்கொண்டு 250kW க்கும் அதிகமான திட்டங்களுக்கு ரூ. 15.81 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்படக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இல்லாமல் உச்சக்கட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், 2027 மார்ச் மாதத்திற்குள் குறைந்தபட்சம் 450 மெகாவாட் (MW) சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு கட்டமைப்பைத் தொகுப்பில் சேர்க்க தேசிய அமைப்பு இயக்குநருக்கு (NSO) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பங்குதாரர்களின் பரிந்துரைகளைக் கேட்டறிந்த பின்னரே இந்த விரிவான கட்டணக் கொள்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
