‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!

மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதியான சந்தேக நபரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது சேர்ட், காற்சட்டைகளை ‘அயன்’ செய்வதற்காக அருகிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நாட்களில் மின்சாரக் கட்டணம் பெருந்தொகையாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமது வீட்டில் அயன் செய்ய வேண்டாமெனவும் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதால்
வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வயதான அந்த தாய் மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன் தலை மயிரை பிடித்து கொடூரமாக தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தாய் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரான மகனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles