இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இலங்கை அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 வருடங்களின் பின்னர் நியூசிலாந்தை இலங்கை வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மாலை 6.35 மணியளவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
வெகு நேரம் மழை தொடர்ந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இரவு 9.00 மணிக்கு ஆட்டம் தொடர்ந்துபோது நியூஸிலாந்துக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.