மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்க பேதம் மறந்து மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் போராடின. அதன் பலனாக தற்போது ஆயிரம் ரூபா கிடைத்திருந்தாலும் ஆயிரம் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன. வழமையைவிடவும் தொழிலாளர்கள்மீது தொழில் சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதுடன், வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல தொழிற்சங்கங்களுக்கும் ஆயிரத்தால் நெருக்கடி – தலையிடி – கஷ்ட காலம் என்றே கூறவேண்டும்.
ஆயிரம் ரூபா விடயத்தில் கம்பனிகளின் அழுத்தங்களுக்கு பணியாமல் தொழிற்சங்கங்கள் சமராடின. இதனால் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை பெருந்தோட்டக் கம்பனிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தொழிற்சங்கத்தை பலவீனமடையச்செய்தால் தொழிலாளர்களின் கொட்டத்தையும் அடக்கிவிடலாம் என்பதே கம்பனிகளின் கணக்கு.
இதன்படி தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் சந்தாவை அறிவிட்டு, தொழிற்சங்கங்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் நடைமுறையை கம்பனிகள் இடைநிறுத்தியுள்ளன. இனிமேல் தாம் அந்த பணியை செய்யப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளன. இதனால் வழிதெரியாமல் தொழிற்சங்கங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.
தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை நம்பியே தொழிற்சங்கங்களின் நிர்வாக இயந்திரம் சுழல்கின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் தொழிற்சங்க அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.
மலையகத்திலுள்ள முக்கிய தொழிற்சங்கமொன்றில் கடந்த மாதம் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே. தொழிலாளர்களிடமிருந்து நேரடியாக சந்தாவை வசூலித்துக்கொள்ளுமாறு இடித்துரைக்கப்பட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்போமா என்றுகூட தொழிற்சங்கங்கள் சிந்திக்க தொடங்கியுள்ளன.
தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க கட்டமைப்பு என்பது அவசியம். ஆரம்பகாலத்தில் சந்தா இன்றிதான் தொழிற்சங்கங்கள் இயங்கின. அதன்பின்னர் தோட்டவாரியாக வசூலிக்கப்பட்டன. அதன்பின்னர் சம்பளத்தில் இருந்து கம்பனிகள் வசூலித்து, தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் நடைமுறை வந்தது.மலையக தொழிற்சங்கங்களின் கடந்த செயற்பாடுகள் தொழிலாளர்கள் சினம்கொள்ள வைத்துள்ளன. எனவே, சந்தா நிறுத்தப்பட்டதுகூட பலருக்கு சந்தோஷம்தான். ஆனால் சங்கமின்றி பயணிப்பது ஒரு சறுக்கலாகவே அமையும். எனவே, தமது பயணத்தை தொழிற்சங்கங்கள் மாற்றிக்கொண்டால் தொழிலாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது சவாலுக்குரிய விடயமாக அமையாது.
– மலைமகன் –
