இலங்கையில் போராட்டத்தின் ஊடாக மற்றுமோர் ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ இனியும் ஆட்சி மாற்றம் செய்வதற்காகப் போராட்டத்தில் யாரும் ஈடுபடுவார்களாயின், இராணுவத்தினரை பயன்படுத்தி அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இது வன்முறை செயலாகும். அவ்வாறு தீ வைப்பதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள்? தீ வைத்தவர்களின் பின்னால் யார் செயற்பட்டார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்படும்.
தற்போது என்னை ஹிட்லர் என விமர்சிக்கின்றனர். பரவாயில்லை, ஆனால் அனுமதி பெற்று போராட்டம் நடத்துங்கள், அதற்கு தடையில்லை. போராட்டம் மூலம் ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை. கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும்.
பஸில் இரட்டை குடியுரிமை உடையவர் என விமர்சிக்கின்றனர். பஸிலைபோல முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னமும் இரட்டை குடியுரிமை உடையவர்தான்.
” – என்றார்.










