ஆப்கானில் முழு இஸ்லாமிய சட்டத்திற்கு தலிபான் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச் சந்தித்த உயர்மட்டத் தலைவர் ஹிபாதுல்லா அகுன்சாதா இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் பொது வெளியில் தோன்றாத அகுன்சாதா தலிபான்களின் பிறந்தகமான கந்தஹாரில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

“திருடர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் துரோகிகளின் கோப்புகளை உன்னிப்பாக அவதானித்ததாக” அகுன்சாதா கூறியதாக முஜாஹித் குறிப்பிட்டுள்ளார். ஷரியா சட்டத்திற்கான எனது உத்தரவை செயற்படுத்த கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் காபுலில் உள்ள பூங்காவுக்குச் செல்ல பெண்களுக்கு தலிபான்கள் கடந்த வாரம் தடைவிதித்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles