கனடாவுக்கான விசா சேவை நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இணைந்து செயல்பட வாருங்கள் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.
மேலும இந்தியாவால் தேடப்படும் பல காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இதனிடையே சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் தீவிரவாதி ஒரிரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடிய போது எனது கவலைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டேன்.
கனடா மண்ணில் கனேடியரைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புவதற்கு நம்பகமான காரணங்கள் உள்ளன. எங்களிடம் சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் வலுவான நீதி செயல்முறைகள் உள்ளன. சட்டம் தன் கடமையை செய்யும்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என இந்தியாவை அழைக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.