ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியின்கீழ் இனவாதம் கொளுந்துவிட்டு எரிகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுலகத்தில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
” குருணாகலையிலுள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச சபை உடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.அதாவது புவனேகபாகு மன்னர், முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்ததால் அவர் அவ்வளவு பெரிய மன்னன் கிடையாது என்ற தொனியில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். அது உண்மையா, பொய்யா என எனக்கு தெரியாது, ஆனால், முஸ்லிம் பெண்ணொருவம் திருமணம் முடிப்பது தவறா?
இலங்கையில் கடைசி இராஜ்ஜியம் கண்டி இராஜ்ஜியமாகும். அந்த இராஜ்ஜியத்தை தமிழர் ஒருவரே ஆண்டார். ஶ்ரீவிக்கிரம ராஜசிங்கன் கடைசிகாலத்தில் பிரித்தானியருடன் ஒப்பந்தம் செய்தபோது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள், தமிழ் மொழியில்தான் கையெழுத்திட்டனர். அதற்கான சான்றும் இருக்கின்றது.
ஶ்ரீவிக்கிரமராஜசிங்கன் கண்டி இராஜ்ஜியத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ராஜ வம்சம் இல்லாதுபோய்விட்டதால், இந்தியாவுக்கு சென்று அவரை அழைத்துவந்து இங்கு சிம்மாசனத்தில் அமரவைத்தனர். இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு இருந்தது. இனவாதம் இருக்கவில்லை. இன்று இந்த ஆட்சியின்கீழ்தான் இனவாதம் கொளுந்துவிட்டெரிகின்றது. இதன் வெளிப்படையாகவே பிரதமர்கூட மேற்கண்டவாறு கருத்து வெளியிடுகின்றார்.
குருணாகலையில் தொல்லியல் சின்னம் தரைமட்டமாக்கப்பட்டது தவறான செயலாகும். எனினும், தனது கட்சி மேயர் செய்ததால், குறித்த மன்னன் முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்ததால் அவர் பெரிய மன்னன் அல்ல என பிரதமர் கூறமுற்படுவது அவரின் பதவி நிலைக்கு பொறுத்தமற்ற செயலாகும். ” – என்றார்.