இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2023 பெப்ரவரி வரையான பருவத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் நகர்ப்புறங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, உணவுப் பணவீக்கம், ஒகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்திற்கு 1 மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் 1,475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை பெற்றுள்ளது.
இந்தநிலையில் அவற்றின் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அது அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை ஊட்டசத்து உதவி தொடர்வதை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் திரிபோஷ திட்டத்துக்கு மூலப்பொருட்களை (சோளம் மற்றும் சோயா) வழங்குவதற்கு அரசு மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து செயற்படுவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.










