ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை, கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் 27 பாடசாலைகளில் தமிழ்ப் பாடசாலையொன்றும், முஸ்லீம் பாடசாலையொன்றுமாக இரு தமிழ் மொழி மூல பாடசாலைகளும் அடங்கியுள்ளன.
மொனராகலை கல்வி வலயத்தின் ஸ்ரீ விபுலானந்தர் தமிழ் மத்திய மகா வித்தியாலயமும், பிபிலை கல்வி வலயத்தின் பக்கினிகாவெல முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயமுமாக இரண்டு தமிழ்மொழி மூல வித்தியாலயங்களே, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளனவாகும்.
மொனராகலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும் பிபிலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும், வெள்ளவாயா கல்வி வலயத்தின் ஐந்து மத்திய மகா வித்தியாலயங்களும், தனமல்விலை கல்வி வலயத்தின் ஆறு மத்திய மகா வித்தியாலயங்களுமாக 25 மத்திய மகா வித்தியாலயங்கள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. குறிப்பிட்ட 25 பாடசாலைகளும் சிங்கள மொழி மூல பாடசாலைகளாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
மொனராகலை மாவட்டத்தின் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும், முதல் கட்ட ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 29ந் திகதி, இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் 06-04-2021ல் நடைபெற்ற போதே, மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.