இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன. அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான வேட்பாளர்கள் முழு வீச்சுடன் செயற்பட வேண்டிவரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2024 ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதீட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தேர்தலை இலக்கு வைத்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
இதன்படி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி கூட்டணியில் உள்ள கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.
மறுபுறத்தில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் தமது கூட்டணியை விஸ்தரித்தே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.
நிமல்லான்சா, சுசில் பிரேமஜயந்த உட்பட மொட்டு கட்சியில் இருந்து விலகிய சில எம்.பிக்கள் இணைந்து புதிய கூட்டணி எனும் பெயரில் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளது.
அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியும் பரந்தப்பட்ட கூட்டணிக்கான அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பிக்க ரணவக்க தலைமையிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், விமல் வீரவன்ச தலைமையிலும், ரொஷான் ரணசிங்க தலைமையிலும் ஏற்கனவே கூட்டணிகள் உதயமாகியுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளில் பெரும்பாலான கூட்டணிகள் அரச தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் உருவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலும் இக்கூட்டணிகள் ஆசன ஒதுக்கீட்டுகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.