கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி

கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான தாக்குதல் காரணமாக சிறுமி இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடுமையாக தாக்குதல் காரணமாக சிறுமியின் மூளை மற்றும் நுரையீரல் ஆகியன செயலிழந்ததே மரணத்திற்கு காரணம் என கம்பஹா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளை நடத்திய கம்பஹா சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே.எம்.சி.பி. குணதிலக்க வழங்கியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரேதப் பரிசோதனை கம்பஹா பதில் நீதவான் பிரசன்ன ரணவக்க முன்னிலையில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இதன் போது நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியை மனைவியாக்கி கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த முச்சக்கர வண்டி சாரதியான 26 வயதான மனோஜ் பிரியங்கர என்ற சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை நீதிமன்ற உத்தரவின் கீழ் கொழும்பில் சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்று 11 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறுவர் காப்பகம் அது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles