குட்டி தேர்தலுக்கு பிறகு சஜித்தை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் ஜனாதிபதியாவார் என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் கூறப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சிசபைத் தேர்தலில் சிறந்த பெறுபேற்றை பெற்ற பின்னர் கூடிய விரைவில் சஜித்தை ஜனாதிபதியாக்குவதற்கே முயற்சிக்கின்றோம். மாத கணக்கு என்பது முக்கியம் அல்ல. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவிக்கு அவரை கொண்டுவர முடிந்தால்கூட அதனை செய்வோம்.

எனினும், அதற்கென நடைமுறைகள் உள்ளன. பலவந்தமாக ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டு மக்கள் உணர்ந்த பின்னர், மக்களின் விருப்பத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி அரியணையேறும்.
கடந்துள்ள 7 மாதங்களில் நாட்டில் நடந்துள்ளது என்ன? அரசாங்கத்தின்மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் மேலும் வீழ்ச்சியடையும். தவறு நடந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்து, அதனை சரி செய்வதற்கு முற்படுவார்கள்.

மக்களின் நம்பிக்கையுடன், ஆசியுடன் ஜனாதிபதியை தெரிவுசெய்து கொள்வதற்கே நாம் விரும்புகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles