தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் சூழ்ச்சி வலை விரிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா இப்போதைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் குறிப்பு :
தோட்டத்தொழிலாளர் தொடர்பில், அவர்களது நாட்சம்பளம் பற்றிய கோஷம்தான் கடந்த பல்லாண்டுகளாக எப்போதும் உரக்க கேட்டது.
இன்றைய தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அல்லது 1000/= என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500/= க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000/=, கூட்டொப்பந்த முறைமையின் கீழ் வழங்கப்படாது என நாம் கணித்திருந்தோம்.
ஆகவேதான், தோட்டத்தொழிலாளர்களுக்கு சொத்தமாகவோ, நீண்ட குத்தகைக்கோ காணி பிரித்தளிக்கபட்டு அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்-கிராமவாசிகளாக மாற்றப்படுவதே நிரந்தர தீர்வு எனவும் கணித்திருத்தோம்.
தொழிலாளருக்கு தோட்டக்காணி பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று பலர் பலகாலமாய் கூறி வந்தாலும் அதை அரசியல் கோஷமாக்கி, 2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞானத்தில் உள்வாங்கி ஆவணப்படுத்தியது, தமிழ் முற்போக்கு கூட்டணியே..!
இன்று, இந்த கோஷம் அனைத்து தரப்புகளாலும் முன் வைக்கப்படுவது, முற்போக்கான வளர்ச்சியாகும்.
ஆனால், இந்த காணி பிரித்து அல்லது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படுவது என்பதும், வெளிவாரி உற்பத்தி என்று கம்பனிகள் தொழிலாளருக்கு “கண்ட்ராக்ட்” வழங்குவது என்பதும் இதை வேறு விஷயங்கள் என்பதை நாம் உணர வேண்டும். தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை இதுவாகும்.