தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் கள்வர்கள் தப்பவே முடியாது எனவும், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ஊழல்வாதிகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, ‘குற்றவாளிகள் பரிமாற்றம் தொடர்பில் லெட்வியா குடியரசுடன் உடன்படிக்கை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூருடன் இப்படியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படமாட்டாதா? அங்குதானே பிரதான சூத்திரதாரிகள் உள்ளனர்” என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட அர்ஜுன் மகேந்திரனை மையப்படுத்தியே வினா தொடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
‘சிறைக் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் பொதுவான சட்டம் இருந்தாலும் அதனை அமுலாக்கும்போது சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் நீங்கள் கூறும் நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, நீங்கள் கூறும் நபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள். எந்தவொரு குற்றவாளிளையும்
தப்பிவிடுவதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. குழப்பமடைய வேண்டாம். நாம் நிதானமாக செயற்படுகின்றோம். கள்வர்கள், குற்றவாளிகள் தப்பவே முடியாது. மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விடமாட்டோம்.” – எனக் குறிப்பிட்டார்.