” இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி கட்சி. ஆகவே, சமஷ்டியைப் பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா?”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியமையுடன், இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது தாமே அதனை வலியுறுத்தினார் எனவும் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும், உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரைக் கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம், தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம்.
சமஷ்டியைப் பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை ஆச்சரியமளிக்கின்றது எனவும் சிவிகே சிவஞானம் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலை ஆரம்பித்தவன் நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஷ்டியைப் பற்றி பேசினோம். பல விடயங்களைப் பேசினோம். சந்திப்பு முடிவுறும் தருணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்குத் தெளிவுபடுத்தினோம்.
மாகாண சபையைப் பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. வயிற்றில் பிறந்த பிள்ளை எனச் சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம்.
அதேபோல் அந்தச் சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி – சமஷ்டிதான் என்பதைத் தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கின்றது.
நாங்கள் பொய் சொன்னோம் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார். நான் உண்மையைத்தான் கூறுகின்றேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித் தலைவர்கள் இதைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள்.
சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் எனச் சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதைச் செய்வார்கள்.
நாங்கள் சமஷ்டி கட்சி. ஆகவே சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன்.
13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கிப் போகும் எனச் சொல்லி விட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் எனச் சொல்கின்றார். இது சுய முரண்பாடு.
மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கின்றோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழரசுக் கட்சி சொன்னதில்லை. உண்மைக்குப் புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண்.
மன்னாரில் இருக்கக்கூடிய சூரிய சக்தி அமைப்பதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 40 பேர் பணியில் ஈடுபடுகின்றமை என்பதையும் நாங்கள் சந்திப்பின்போது தெரிவித்தோம்.” – என சிவிகே சிவஞானம் மேலும் கூறினார்.










