சம்பந்தன், மனோ, ஜீவன், ஹக்கீம் ஓரணியில் – மலர்கிறது புதிய கூட்டணி! ராதா தகவல்!!

” தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவதுடன், கூட்டணியிலும் பங்கேற்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு மஸ்கெலியாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதியதொரு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் உள்ள இதர தமிழ்க் கூட்டணிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒருமித்த குரலில் எடுத்துரைக்கும் நோக்கிலேயே இக்கூட்டணி உருவாகின்றது. அதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமும் அதில் கலந்துகொள்வோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles