உலகெங்கும் ஒமிக்ரொன் வைரஸ் திரிபு பரவல் தீவிரமடைந்து கடும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது.
புதிய திரிபு நாட்டுக்குள் தீவிரமடையாது கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீனா எடுத்துள்ளது.
சீனாவில் புதிதாக 104 நோயாளர்கள் பதிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று (15) செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெனானில் 52, தியான்ஜினில் 39, குவாங்டாங்கில் 08, ஷாங்சியில் 04, மற்றும் ஜெஜியாங்கில் 01 தொற்று நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக சீன தேசிய சுகாதார ஆணையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விட வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், தியான்ஜின் நகரத்தை அடுத்து தென் சீனாவின் ஜுஹாய் மாகாணத்திலும் ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தென் சீனாவின் ஜுஹாய் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை 07 பேருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.