கொழும்பில் அனுஷ்டிக்கப்படும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலின் ஒரு பகுதியாக பல கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வரை மாபெரும் கறுப்புக்கொடி ஏந்தி நான்கு நாள் நீண்ட நடைப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று ஆரம்பமாகவுள்ள நடைபவனி, பெப்ரவரி 7ஆம் திகதி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சென்றடைவதாகவும், அங்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பிரகடனமொன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நடத்தும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள், தமிழ் சிவில் சமூக குழுக்கள், தமிழ் பெண்கள் குழுக்கள், தமிழ் தொழிற்சங்கங்கள், தமிழ் விவசாயிகள் மற்றும் மீனவ அமைப்புக்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
