லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அரச சேவைகள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டமானது UNOPS, Australian Aid, UK aid, VRIDDHI மற்றும் The Power Foundation ஆகிய சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சவால்களால் அதிகம் பாதிக்கப்படும் பெருந்தோட்டப் பகுதிகளே இத்திட்டத்தின் கீழ் முக்கியமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தொடர்ச்சியான மழை, மண்சரிவு அபாயம் மற்றும் நீடித்த வறுமை நிலை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இங்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
இத்திட்டம் மூன்று பிரதான தளங்களில் செயல்படுத்தப்படுகிறது:
அரச திணைக்களங்களின் சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்த்தல்.
சமூக அடிப்படையிலான அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குதல்.
அதிகாரிகளும் மக்களும் நேரடியாகக் கலந்துரையாடும் ‘இடைமுகக் கூட்டங்கள்’ (Interface Meetings) மூலம் சேவைத் தடைகளை நீக்குதல்.
இவற்றுடன், பெண் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், துப்புரவு உபகரணங்கள், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு விவசாய ஆதரவு, சிறுதொழில் ஊக்குவிப்பு போன்ற வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட லுணுகலை பார்க் தோட்டம், அடாவத்தை தோட்டம் மற்றும் சோலன்ஸ் தோட்டம் உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
– இரா. சுரேஷ்குமார் (தெமோதரை நிருபர்)










