நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 34 பேர் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலை நேற்று இரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று மீண்டும் இந்த மோதல் வெடித்துள்ளது.
