செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப நாசா சோதனை

நான்கு சிறிய அறைகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சிவப்பு மணலைக் கொண்ட செவ்வாய்க் கிரகத்தை உருவகப்படுத்தும் வசிப்பிடத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய் பயணத் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக இங்கு தன்னார்வலர்கள் ஓர் ஆண்டு வாழவுள்ளனர்.

டெக்சாசின், ஹூஸ்டனில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தின் பிரமாண்ட ஆய்வு தளத்திலேயே இந்த மாதிரி வசிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை காலத்தில் ஆரம்பமாகும் முதல் சோதனையில் நான்கு தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் நீண்ட கால தனிமையில் மனிதனின் உடல் மற்றும் உள சுகாதாரம் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

இந்தத் தன்னார்வலர்கள் இரண்டு குளியலறைகள், காய்கறிப் பண்ணை, மருத்துவ பராமரிப்புக்கான ஓர் அறை, ஓய்வு எடுப்பதற்கான ஒரு பகுதி மற்றும் பல்வேறு வேலை நிலையங்களைக் கொண்ட 1,700 சதுர அடிப் வசிப்பிடத்திற்குள்ளேயே ஓர் ஆண்டு காலம் வாழவுள்ளனர்.

இதன் வெளிப்பகுதி, செவ்வாயின் சுற்றுச்சூழலுக்கு அமைய காற்று அடைக்கப்பட்ட பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாசா நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தில் அதிக அவதானம் செலுத்தி வரும் நிலையில் அண்டை கிரகமான செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது.

Related Articles

Latest Articles