” நாட்டுக்கு தேவையான புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கே மக்கள் ஆணைவழங்கியுள்ளனர். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக , தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரலை ஒதுக்கிவைத்துவிட்டு – கட்சிபேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறைகூவல் விடுத்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான செலயமர்வு இன்று (25) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. நாளையும் (26) செயலமர்வு இடம்பெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதம அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துமாறு 2005 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர்.அதனை ஏற்று நாட்டை ஐக்கியப்படுத்தினோம்.அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அன்றுபோல இம்முறை மற்றுமொரு பாரிய பொறுப்பை மக்கள் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும், நாட்டுக்கு தேவையான விதத்தில் புதியதொரு அரசியலமைப்பு அவசியம் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும். 1977 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது.
காலத்துக்கேற்றவகையில் அது மாற்றப்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கின்றது. அரசியலமைப்பு என்பது ஒருதரப்புக்கு சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது. அரசியலமைப்பிலுள்ள ஒவ்வொரு சரத்துகளும் எமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தக்கூடியவை. எனவேதான் மக்கள் கோரும் அரசியலமைப்பை இயற்றுவதற்காக கட்சி பேதங்களை மறந்து செயற்படவேண்டியது எமது பொறுப்பாக உள்ளது.” – என்றார்.