தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்காலிக தலைவராக செயற்படும் பாரதிதாசன் சபையை பிழையாக வழி நடத்துகின்றார். உள்ளாட்சி மன்றங்களின் நடைமுறைகளுக்கு உட்படாமல் தன்னிச்சையாக செயற்படுவதுடன் பல பிழையான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகின்றார் என தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உறுப்பினர் நடேசன் பாலமுரளி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று நேற்று மாலை (17.05.2021) தலவாக்கலை விவ்ரெஸ்ட் விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் 7 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தாலமுத்து சுதாகரன் (சுயேட்சை குழு உறுப்பினர்)நடேசன் பாலமுரளி (மலையக மக்கள் முன்னணி) மயில்வாகனம் பரமநாதன் (பொதுஜன பெரமுன)பிரசன்ன விதானகே (பொது ஜன பெரமுன) சந்தன குணதிலக (பொதுஜன பெரமுன) ஜெய்னுலாப்தீன் (ஜக்கிய தேசிய கட்சி) திசார மஞ்சநாயக்க (சுயேச்சை) ஆகிய 7 உறுப்பினர்களுமே இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லிந்துலை நகர சபையின் உறுப்பினர் நடேசன் பாலமுரளி
எங்களுடைய தலவாக்கலை லிந்துலை நகர சபையில் தற்பொழுது 11 உறுப்பினர்கள் இருக்கின்றோம். அதில் இன்று 7 உறுப்பினர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுடைய சபையில் தலைவராக இருந்தவர் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டு தற்காலிக தலைவர் ஒருவரை ஆளுநர் நியமித்திருக்கின்றார். அவருக்கு நாங்கள் அனைவரும் எங்களுடைய ஒத்துழைப்பை வழங்கினோம்.
ஆனால் அவர் சபையை பிழையாக வழிநடத்துகின்றார்.பிழையான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குகின்றார்.சட்டங்களுக்கு மாறாக செயற்படுகின்றார்.இதன் காரணமாக நாங்கள் எங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டோம்.
இது தொடர்பாக நாங்கள் ஆளுநருக்கு அறிவித்துள்ளதுடன் பெரும்பான்மை பலத்தை கொண்ட எங்களுடைய குழுவில் இருந்து ஒருவரை நிரந்தர தலைவராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
அண்மையில் விசேட கூட்டம் ஒன்றை கூட்டுவதாக அறிவித்து அந்த கூட்டத்தை பிழையான நடைமுறையை பின்றபற்றி கூட்டியதுடன் அதில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயத்தை செய்ய வேண்டும் என்று அனுமதி கோரினார்.
நாங்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டோம்.காரணம் அந்த விடயம் நிகழ்ச்சி நிரலில் இல்லை.மேலும் எங்களுடைய சபைக்கு சபை நிதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்ய வேண்டாம் என மாகாண ஆணையாளர் எச்.எம்.எம்.யு.பி.ஹேரத் 09.03.2021 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.இதனை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது.
எனவே அதனை மீறி செயற்பட்டால் எங்களுடைய உறுப்பினர்களுக்கு சட்ட ரீதியான பிரச்சினை ஏற்படும்.மேலும் தற்காலிய தலைவராக இருக்கின்றவர் விசேட கூட்டத்தில் கொரோனா தொடர்பான எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை.
விசேட கூட்டம் எவ்வாறு கூட்டப்பட்டது என்றும் எங்களுக்கு தெளிவுபடுத்தவில்லை எனவே மத்திய மாகாண ஆளுநர் புதிய நிரந்தர தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலவாக்கலை லிந்துலை மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் நடேசன் பாலமுரளி மேலும் தெரிவித்துள்ளார்.
