தேசிய தலைமைத்துவத்தை உருவாக்க எல்லே குணவங்ச தேரர் களத்தில்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. 69 லட்சம் பேர் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்படக்கூடிய தேசிய தலைமைத்துவம் நாட்டில் இல்லை – என்று தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதுவரை தான் அரசியல் மேடை ஏறியதில்லை எனவும், எதிர்காலத்தில் ஏறவேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் எல்லே குணவங்ச தேரர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தேசிய தலைமைத்துவம் என்பது இல்லை. அரசியல் தலைமைத்துவமே இருக்கின்றது. இதனால் அரசியல் இலக்குகளை மட்டும் நோக்கிய பயணம் அமைந்துள்ளது. நாடு குறித்தோ மக்கள் தொடர்பிலோ சிந்திக்கப்படுவது இல்லை. தலைவர்களை உருவாக்க முடியாது. அவர்கள் உருவாக வேண்டும்.

நாடுதான் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து, எமது முதாதையர்கள் எமக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து அது. எனவே, வாடகைக்காரர்கள்போல் அல்லாமல், இது எமது நாடு, எமது சொத்து என நினைத்து நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் போராடுவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில் அமைத்த குழுவில் நானும் இருக்கின்றேன். ஆனால் ஒரு தடவை மாத்திரமே அக்கூட்டத்தில் பங்கேற்றேன். அதன்பிறகு அங்கு செல்லவில்லை. எதிர்ப்பார்த்தப்படி நகர்வுகள் அமையவில்லை என்ற வேதனையே இதற்கு காரணம்.

நாம் கட்டிய தோரணம் இது (நாம் உருவாக்கிய அரசு) . அப்படி இருந்தும் எமக்கு தெரியாமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொருத்தமற்ற விதத்தில் கட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. 69 லட்சம் பேர் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக எமது போராட்டம் தொடரும்.

தேசிய தலைமைத்துவம் உருவாக்கப்படவேண்டும். அதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். இதுவரை நான் அரசியல் மேடை ஏறியதல்லை. தேசிய தளத்தில் இருந்தே நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். எனவே, எதிர்காலத்தில் அரசியல் மேடை ஏறுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன். கொழும்பு துறைமுகத்தின் ஒருவீதமேனும் எவருக்கும் விற்பனை செய்யப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. ” – என்றார்.

Related Articles

Latest Articles