” அதிகாரம் தாருங்கள், தோட்ட நிர்வாகத்தினை மிரட்டுகிறேன் என்று வீராப்பு பேசி – வாக்கு வேட்டை நடத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெறும் 240 ரூபாவை பெற்று கொடுக்க முடியாது தயங்குவது ஏன்?.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கூட்டு ஒப்பந்தம் என்பது அடிமை சாசனம். அதன் ஊடாக அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைக்கூட பெற்றுக்கொடுக்கமுடியவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், விலை வாசியையும் எடுத்து கூறி தேயிலை துறை மூலமாக கம்பனி காரர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தையும் சுட்டி காட்டி, தற்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 240/= ரூபாவை அதிகரித்து பெற்று கொடுக்க உங்களுக்கு திறமை இல்லை என்றால் ஏன் அதை பிடித்து கொண்டு தொங்குகிறீர்கள்?
மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க முடியாத கம்பனிகளை உடனடியாக வெளியேற சொல்லுங்கள். மக்களிடம் அதிகாரம் கேட்டீர்கள், மக்களும் கொடுத்தார்கள். இப்போ நீங்கள் தூங்குகின்றீர்களா?.” – எனவும் ஜீவனிடம் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.










