“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா அல்ல, 2 ஆயிரம் ரூபா வழங்கினால்கூட அது போதாது. எனவே, குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2000 ரூபா வழங்கப்பட வேண்டும்.
200 ரூபா சம்பள அதிகரிப்புக்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது. குறைந்தபட்சம் ஆயிரத்து 700 ரூபாவது அவசியம கிடைக்க வேண்டும். 2000 ரூபாவுக்கு மேல் செல்ல வேண்டும்.
பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதலே நஷ்டம் என்ற புராணத்தையே கம்பனிகள் பாடிவருகின்றன. இலாபம் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு கையளிக்கப்படுவதில்லை. காரணம் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்கவில்லை.” – என்றார் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்.