” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் தொழில் செய்கின்றனர். தனியார் தோட்டங்களில் நஷ்டமடைந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன.
எனவே, ஒவ்வொரு தோட்ட நிர்வாகங்களுடனும் முதலில் தனித்தனியே பேச்சு நடத்துமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் பொதுக்கலந்துரையாடலுக்கு செல்ல முடியும். நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.