பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, பசறையில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இன்று இனம்காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும், காகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு இன்று மாலை அனுப்பப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் பசறையின் 43 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பரிசோதனை அறிக்கை, இன்று கிடைக்கப்பெற்றபோதே, இருவருக்கு கோவிட்19 தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
பசறை – ‘கோவில்கடை’ப் பகுதியில் கோவிட் 19 தொற்று உறுதியான 40 வயது நிரம்பியநபர், ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட கோவிட் 19 தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவராவார்.
அடுத்து, பசறைப்பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டலோவர் பிரிவைச்சேர்ந்த 23வயது நிரம்பிய நபருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கொழும்பிலிருந்து பசறைவந்து, தனிமைப்படுத்தப்பட்ட சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவராவார்.
இவ்விருவரும், ககாகொல்லை கோவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பசறையில் கோவிட்19 தொற்று உறுதியாகியிருந்து சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட 58பேரில், 38 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
பசறையில் கோவிட்19 தொற்று உறுதியான இருவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனம்கண்டு, அவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை மேலும் தெரிவித்தார்.
