சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை தெரிவித்தார்.
உக்ரைனுடன் உள்ள பிரச்சினை போன்று சுவிடன் மற்றும் பின்லாந்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் நேட்டோவில் இணைய விரும்புகிறார்கள் என முன்னாள் சோவியத் மாநிலமான துர்க்மெனிஸ்தான் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் புடின் தெரிவித்தார்.
தற்போது வரை ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இரு நாடுகளும் நேட்டோவில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அதன் பின்னர் அதே அச்சுறுத்தல்களை அவர்களும் எதிர்கொள்ள நேரிடும் என்று புடின் கூறினார்.
நேட்டோவில் சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகளுடன் இணைந்தால் அந்த நாடுகளுடன் ரஷ்யாவுக்கு உள்ள உறவுகள் மோசமடைவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் நோக்கம் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை விடுவிப்பது மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே ஆகும் எனவும் புடின் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யப் படைகளின் நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்துள்ளன. திட்டமிட்டவாறு இராணுவ நடவடிக்கை தொடர்கிறது. எனினும் இந்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால எல்லையைக் குறிப்பிட முடியாது எனவும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.