பயணத்தடைக்கு மத்தியிலும் சட்டவிரோத நடவடிக்கை – நோர்வூட்டில் மூவர் கைது!

நாடு முதுவதும் கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவரும் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் அயரபி தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்ஹோம் தோட்டத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அயரபி தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, போத்தலொன்றை சுமார் ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்துவந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 லீடர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன.

ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் உள்ள இருவர் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles