துவாரக்சன்
அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேச மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வரும் மரண விசாரணை அதிகாரி (Inquirer into Sudden Deaths) பற்றாக்குறைப் பிரச்சினை, தற்போது அப்பகுதியில் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதிக்கு என நிரந்தர மரண விசாரணை அதிகாரி ஒருவர் இல்லாத காரணத்தினால், எதிர்பாராத மரணங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில், இறந்தவர்களின் சடலங்களை உரிய நேரத்தில் நல்லடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிக்கும் அவல நிலை தொடர்கிறது.
சட்டப்பூர்வமாக நடைபெற வேண்டிய மரண விசாரணைகள் அதிகளவில் தாமதமாவதால், ஏற்கனவே மரணத் துயரில் இருக்கும் குடும்பத்தினர், உடல்களைப் பாதுகாப்பதிலும் அடுத்தகட்ட சடங்குகளைச் செய்வதிலும் சொல்லொணா மனவேதனைக்கும் அலைச்சல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையிலும் இப்பிரச்சினை அப்பகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பகுதி மக்கள் அவசரமாக வலியுறுத்துகின்றனர்.
நிரந்தர அதிகாரி நியமனம்: அக்கரப்பத்தனை – டயகம பிரதேசத்திற்கென பிரத்தியேகமான, நிரந்தர மரண விசாரணை அதிகாரி ஒருவரை விரைந்து நியமிக்க வேண்டும்.
அடிப்படை உரிமை பாதுகாப்பு: மரணத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளை இலகுபடுத்தி, மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மலையகத்தின் பின்தங்கிய இப்பிரதேச மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு, நீதி அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.










