புசல்லாவை – பெரட்டாசி இ.போ.ச. பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் செல்லமுத்து தெரிவித்தார்.
குறித்த பஸ் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தலைமையில், கம்பளை, தொலுவையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய செல்லமுத்து தலைமையிலான இதொகா பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உடபலாத பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்க உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை விரைவில் ஆரம்பிக்குமாறு கம்பளை டிப்போ அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த சந்திப்பு வெற்றியளித்தாகவும், இவ்வாரத்துக்குள் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் செல்லமுத்து குறிப்பிட்டார்.
புசல்லாவை, பெரட்டாசி பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் அண்மையில் போராட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
