புஸல்லாவை சரஸ்வதி கல்லூரிக்கு மேலும் 15 மில்லியன் ரூபா – இந்தியா நடவடிக்கை

புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில், இந்திய அரசின் 80 மில்லியன் ரூபா இந்திய நிதி உதவியின்கீழ் சகல வசதிகளுடன் கூடிய கணித , விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணினிக் கூடம், வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய 4 மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கட்டடத் தொகுதிக்கு தேவையான அனைத்து ஆய்வுக்கூட உபகரணங்களையும், கணினிகளையும் வழங்குவதற்கு மேலும் 15 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இது தொடர்பான மீளாய்வு கூட்டமொன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அலுவலகத்தில், அரசியல் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆலோசகர் திருமதி பானு பிரகாஷ் தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், எம். உதயகுமார், கல்வி அமைச்சின் பாடசாலைகளுக்கான கட்டட அபிவிருத்திற்கான பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திட்ட பணிப்பாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரன் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா.திருஞானம், ஆசிரியர்களான பி.கமல்நாதன், ஜி.லோகேஸ்வரன் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

அதேவேளை, இந்திய மத்திய அரசின் 395 மில்லியன் ரூபா நிதி உதவியின்கீழ் மலையகத்தில் தற்போது 10 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில பெருந்தோட்டப்பாடசாலைகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

பா.திருஞானம்

Related Articles

Latest Articles