மக்கள் கோரிக்கைவிடுத்து 24 மணிநேரத்துக்குள் வேலையை ஆரம்பித்த ஜீவன்

புசல்லாவ மெல்போர்ட் தோட்ட மக்களுக்கான குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

அமைச்சரின் ஆலோசனைக்கமைய மெல்போர்ட் தோட்டத்துக்கு இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செல்லமுத்து, தோட்ட தலைவர்கள் உட்பட மக்களுடன் கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுக்கொண்டார்.

தமது தோட்டத்தில் உள்ள குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்தி தடையின்றி சுத்தமான நீர் கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்குமாறு சுமார் 650 குடும்பங்கள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவ மெல்போர்ட் தோட்டத்தில் வாழும் மக்களே இவ்வாறு கூட்டாக வேண்டுகோள் முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, இதொகாவின் உப தலைவர் செல்லமுத்துவை தொடர்பு கொண்டு, தோட்டத்துக்கு நேரில் சென்று அறிக்கை பெற்றுகொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைய அங்கு சென்றிருந்த செல்லமுத்து, இது சம்பந்தமாக அமைச்சருக்கு அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளார். அதன்பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக விரைந்து செயற்பட்டு, பிரதிநிதிகளை தமது தோட்டத்துக்கு அனுப்பியதற்காக அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles