கேகாலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கடும் மழையினால் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு என அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவால் இதுவவரை ஐந்து மரணங்கள் நிகழ்துள்ளது.
இந்நிலையில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெவண்ட் தோட்டத்தில் கடந்த 5ஆம் திகதி பெய்த தொடர்மழையினால் தோட்டத்தில் லயக்குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவுக்கான அறிகுறி தென்பட்டதோடு நிலத்தில் வெடிப்புக்களும் ஏற்பட்டிருந்தன.
இதனால் மண்சரிவு ஏற்படக்கூடுமென மக்கள் அச்சத்தில் இருந்தமையினால் 25வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பில் உள்ள 149 பேர் தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தற்காலிக்க கூடாரங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இதே போன்றதான மண்சரிவு அபாயம் ஏற்பட்டு அப்போதும் இவ்வாறான நிலைமையாகவே தற்காலிக்கமாக தங்கவைத்து மீண்டும் அதே அபாயமிக்க லயக்குடியிருப்புக்கே அனுப்பப்பட்டனர். இப்பொழுது மீண்டும் தோட்ட நிர்வாகம் தற்காலிக கூடாரங்களை வழங்கி தங்க வைத்துள்ளனர்.
இந்த கூடாரத்தில் தொடர்ச்சியாக எம்மால் வாழமுடியாது. பிறந்து 12 நாளான கைக்குழந்தையுள்ளது. மற்றும் சிறுபிள்ளைகள் வயோதிபர்கள் என ஓரே குடும்பத்தை சேர்ந்த 5, 6 பேர் ஒரே சிறிய கூடாரத்தில் வசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த கூடாரத்தில் சிறு பிள்ளைகளை விட்டு வேலைக்கும் செல்லமுடியாத நிலை, சாப்பாட்டுக்கும் வசதியில்லாத நிலையுள்ளது. நேற்றுமுன்தினம் அலுகொல்ல தோட்ட கோயில் ஐயர் எமது நிலையை கருத்தில் கொண்டு ஒருவேலை உணவை வழங்கினார் என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இடன்று (7ஆம்) திகதி) வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்திபேரவை இம் மக்களின் நிலைமையை அறிந்து உலர், உணவு பொருட்களை வழங்கியதாக அமைப்பின் தலைவர் திருமதி கோமதி அம்மாள் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் இவர்களின் நிலைமையை அறியவோ அல்லது வருகைத்தரவோ இல்லையென கவலைதெரிவித்தனர். எனவே இவர்களுக்கான நிரந்தர தீர்வாக தனிவீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களின் துன்பவியல் வாழ்க்கைக்கு முற்றுவைப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
