ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தமிழ் வேட் பாளர்களுக்கே வாக்களிப்பார்கள். ஆனால் கொழும்பு மாவட்ட நிலைவரம் அவ்வாறானது அல்ல. இதற்கு நேர் மாறானது.
காரணம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் வாழு கின்ற மாவட்டம். அங்கு வசிக்கின்ற சிங் கள மக்கள் சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குக்களை வழங்குவார்கள். ஆகவே அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோகணேசன் அவர்களுக்கு வழங்கி கடந்த நாடாளு மன்ற தேர்தலில் கொடுத்த ஆணையை விட பல மடங்கான ஆணையை வழங்க வேண்டிய கடமை உள்ளது.
இந்த ஜனநாயகக் கடமையை இந்த காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்.
இலங்லையில் உள்ள தமிழர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் போது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது குரல் கொடுக்கின்ற ஒரு மனிதநேய வாதியாகவே மனோ கணே சன் அவர்களைப் பார்க்கின்றேன்.
தமிழர் தரப்பு நியாயங்களையும் சிங்கள பேரினவாத அரசின் போலிப் பிரசாரங்களையும் தகர்த்து அதன் உண்மைத் தன்மைகளை சிங்கள மக்களுக்கு
வழங்கக் கூடிய பேச்சாற்றல் மற்றும் மொழியாற்றல் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். ஆகவே இவ்வாறானவர்கள் என்றுமே தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையைக் கொழும்பு மாவட்ட தமிழர்கள் புரிந்து அவரை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாடு ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதனை அனைவரும் அறிகின்றோம். பார்கின்றோம். இந்த நிலையில் தமிழர்களின் இருப்பைத் தக்க வைக்க, தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ, அனைத்துப் பகுதிகளிலும் தமிழர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட நலன் களுக்காக செயற்படுகின்ற தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை காலம் உருவாக்கி உள்ளது. காலத்தின் கட்டளையை ஏற்று ஒரே திசையில் ஓர் இலக்கு நோக்கி பயணிக்க தயாராவோம். – என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது