மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு நியமனம்

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர். எம்.சமன் குசும்சிறி ரத்நாயக்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் ஏ.கே.எஸ் டி அல்விஸ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சிரேஷ்ட சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சை கற்கைகள் பேராசிரியர் பவந்த கமகே, சிரேஷ்ட எலும்பியல் மற்றும் ஆர்த்தோபெடிக்ஸ் கலாநிதி நரேந்திர பின்டோ, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் நாமல் விஜேசிங்க, இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஜே. பலவர்தன, சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர் (மருத்துவ சேவைகள்) ஆர். எல். எஸ். சமன்மலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, லைசியம் கெம்பஸ் மற்றும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மருத்துவ மாணவர்களுக்காக போதனா வைத்தியசாலையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற அரச வைத்தியசாலைகள், ஆய்வு செய்தல், மீளாய்வு செய்தல், இனங்காணல் மற்றும் மருத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் இக்குழு ஆராயும்.

இதன்படி, இனங்காணப்படும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், எட்டு (08) வாரங்களுக்குள் குழுவின் இணங்கானல் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles