மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. இந்நிலையிலேயே தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சு.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெ லியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் மொட்டுடனும் இணைந்து சுதந்திரக்கட்சி போட்டியிட்டது. எனினும், மொட்டு கட்சியால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பிரச்சாரங்களின்போது சரமாரியாக சொற்களைகள் தொடுக்கப்பட்டன. ஆசனபங்கீட்டிலும் அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது.
எனவேதான் மாகாணசபைத் தேர்தலில் தனிவழி செல்வது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. இதன்படி சில மாகாணங்களில் தனித்தும் சில மாகாணங்களில் கூட்டு பயணத்தையும் சு.க. மேற்கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது என அறியமுடிகின்றது.