ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பல நகரங்களில் திங்கட்கிழமை வெப்பநிலை புதிய சாதனையை எட்டியுள்ளது.
பிரான்சில் வெயிலின் தாக்கத்தினால் காரினுள் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டும், வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ள நிலையில், பிரிட்டனில் இந்த வாரத்தில் ஜூன் மாதத்திற்கான வரலாற்று வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிரான்சின் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டப் பகுதியான போர்டோக்ஸ் (Bordeaux) நகரில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸாக (107.4 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகி, கடந்த ஆகஸ்ட் மாத சாதனையை முறியடித்தது.
மத்திய பிரான்சின் போய்ஷியர்ஸ் (Poitiers) நகரில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது இதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு பதிவான உச்சக்கட்ட வெப்பநிலையை விட அதிகமாகும்.
வழக்கமாகக் குளிர்ந்த வானிலையைக் கொண்ட ஸ்பெயினின் வடக்குப்பகுதியிலுள்ள சான் செபாஸ்டியன் (San Sebastian) நகரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இது ஜூன் 22 ஆம் திகதிக்கான வரலாற்றுச் சராசரி வெப்பநிலையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும் என ராய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பின் (WMO) ஏப்ரல் மாத அறிக்கையின்படி, ஐரோப்பா கண்டம் உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிவேகமாக வெப்பமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள்தென்கிழக்கு பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) பகுதியில், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த குடும்பக் காரினுள் மயங்கிய நிலையில் கிடந்த 2 மற்றும் 4 வயதுடைய இரு சிறுவர்களை அவர்களது தாய் மீட்டுள்ளார்.
எனினும், முதலுதவிப் பிரிவினரால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
போர்டோக்ஸ் பிராந்தியத்தில் கடந்த வார இறுதியில் வெப்ப அலையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக 80 முதல் 95 வயதுக்கு இடைப்பட்ட மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரி சோஃபி ப்ரோகாஸ் தெரிவித்தார்.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் பிரான்சில் தண்ணீரில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, “பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ள இடங்களில் மட்டுமே நீந்துங்கள்” என பிரெஞ்சு சிவில் பாதுகாப்புச் சேவையின் செய்தித் தொடர்பாளர் ஜெரோம் பவுலாஞ்சர் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலையின் போது குளிப்பதற்காக நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 172% ஆக அதிகரித்திருந்தது.
‘ஒமேகா பிளாக்’ (Omega block) என்றால் என்ன?ஐரோப்பாவின் பெரும்பகுதியைத் தாக்கியுள்ள இந்த வெப்ப அலையானது ‘ஒமேகா பிளாக்’ என்று அழைக்கப்படுகிறது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தீவிர வானிலை மற்றும் காலநிலைக்கான ஆய்வாளர் கிளேர் பார்ன்ஸ் இது பற்றிக் கூறுகையில்:”இந்த வானிலை அமைப்பு கிரேக்க எழுத்தான ‘ஒமேகா’ ($\Omega$) வடிவத்தைக் கொண்டுள்ளது.
இதன் நடுப்பகுதியில் வெப்பமான காற்றும், இருபுறமும் குளிர்ந்த காற்றும் தேங்கியிருக்கும். இது வட ஆபிரிக்காவின் சஹாராப் பாலைவனத்திலிருந்து வெப்பக் காற்றை மேலே இழுப்பதால் தான் இவ்வளவு கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இது மிக மெதுவாக நகர்வதால், வெப்பத்திலிருந்து தப்பிக்கக் காற்ரோ அல்லது தென்றலோ வீசுவதில்லை.”மேலும், பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளும் புயல்களும் தீவிரமடைந்து, வெப்பநிலை அதிகரிப்பதோடு அதிக மழையையும் உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டனின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையமான மெட் ஆபீஸ் (Met Office), நான்கு நாள் வெப்ப அலை காரணமாக சில இடங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று கூறியுள்ளது.
இது 1957 மற்றும் 1976 இல் பதிவான ஜூன் மாத சாதனையான 35.6 டிகிரி செல்சியஸை எளிதில் முறியடிக்கும். சில வாரங்களுக்கு முன்புதான் பிரிட்டன் மே மாதத்திற்கான தனது மிக உயர்ந்த வெப்பநிலை சாதனையை முறியடித்திருந்தது.
பாரிஸ் நகரில் ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலையாக 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளதாக பிரெஞ்சு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஸ்பெயினின் ஏஇஎம்இடி (AEMET) வானிலை முகமையின் செய்தித் தொடர்பாளர் ரூபன் டெல் காம்போ கூறுகையில், “இந்த ஆண்டின் வழக்கமான வெப்பநிலையை விட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரையும், சில வடக்குப் பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாகவும் வெப்பநிலை பதிவாகி வருகிறது” என்றார்.
இத்தாலியில் ரெட் அலர்ட் மற்றும் விலங்குகளின் துயர்கடுமையான வெப்பம் காரணமாக இத்தாலி திங்கட்கிழமை 12 நகரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுத்துள்ளது. டுரின் (Turin) நகரில் மின்சாரக் கட்டமைப்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியதால், அவ்வப்போது ஏற்படும் மின்தடைகளைச் சமாளிக்க ஊழியர்களின் பணிநேரம் இரட்டிப்பாக்கப்பட்டு, கூடுதல் மின் உற்பத்தி எந்திரங்கள் (Generators) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கூரைகளின் விளிம்புகளில் கூடுகட்டும் சிட்டுக்குருவிகள், தகைவிலான் குருவிகள் (Swallows), வாத்துகள் போன்ற பறவைகள் இந்த அசாதாரண வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தின் நிறுவனர் ரோமைன் டி ஜேகெர் தெரிவித்துள்ளார்.
“கூரைகளின் வெப்பநிலை சில நேரங்களில் 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை அடைகிறது. இதனால் பறவைக் குஞ்சுகள் கூடுகளுக்குள் வெந்து இறப்பதை விட, கீழே குதிப்பதைத் தேர்ந்தெடுக்கின்றன,” என்று கூறிய அவர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 150 பறவைகளைத் தங்களது காப்பகம் மீட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.










