பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் நீதவான் விராஜ் வீரசூரிய தண்டனையை வழங்கினார்.
கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய இராஜரட்ணம் கேதீஸ்வரன் என்பவர் தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவருக்கு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.
மேலும் நீதிமன்ற தண்டணை பணமாக ஐந்தாயிரம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இத்தகயை செலுத்தாவிட்டால் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆ.ரமேஷ்
