மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது மீள அமைக்கப்பட்ட வீட்டுடன் சேர்ந்த காணிகளுக்கு உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
இது குறித்தான அமைச்சரவை தீர்மானம் வருமாறு,
மேல் கொத்மலை நீர் மின்சாரத் திட்டம் 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த திட்டத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடு, கடை மற்றும் வேலைத்தளங்கள் மாற்று இடத்தில் நிர்மாணித்து 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சம்பந்தப்பட்ட நஸ்டஈடு வழங்கும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் காணிகளுக்கான உரிமை இதுவரையில் வழங்கப்படவில்லை.
இதனால் மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதினால் இடம்பெயர்ந்த தரப்பினருக்கு மாற்றுத் தொழில் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை பயனாளிகளுக்கு விடுவிப்பதற்கான உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.