அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல்நிலை காரணமாகவே மே தின நிகழ்வுகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரச கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இம்முறை மேதினக் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரச தரப்புக்குள் ஏற்பட்டுள்ள மோதலை தடுப்பதற்கும், அரசியல் குழப்பங்களை மறைப்பதற்காகவுமே மே தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இது தொடர்பில் வினவியபோதே பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
” கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேர்தல்கூட பிற்போடப்பட்டது. எனவே, மே தினம் குறித்து சுகாதார தரப்பினரே முடிவெடுத்துள்ளனர். கட்சி என்ற அடிப்படையில் மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நாமும் தயார். ஆனாலும் அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏனெனில் அண்டை நாடான இந்தியாவில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது.” – என்றார்.