ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம் செய்யும் நிகழ்வையே கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
எனினும், நாளை சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி கட்சி தலைமையகத்தில் குறிப்பிட்ட சிலரின் பங்குபற்றலுடன் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
இக்கூட்டத்தின்போது மொட்டு தலைமையிலான கூட்டணி அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதென்ற தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அத்துடன், அரசிடம் சில யோசனைகளை முன்வைப்பதற்கும் இதன்போது முடிவெடுக்கப்படலாம்.
அரசிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருகின்றனர். அண்மையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் இதனை வலியுறுத்தியுள்ளனர். எனினும், பெரும்பாலான உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளன.
மைத்திரியின் விசேட உரையும் நாளை இடம்பெறவுள்ளது.










