யாழ்.மாவட்டத்தைக் கட்டியெழுப்ப ‘மீண்டெழும் அலைகள்’ திட்டம் வகுப்பு!

 

யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி திட்டங்கள் மீண்டெழும் அலைகளென அறிமுகப்படுத்தப்பட்டன. 2025 மற்றும் 2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எவை, அவை எவ்வாறு முன்னெடுக்கப்படும், அதன்மூலம் மக்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்ககூடிய அனுகூலங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகளால் மேற்படி கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல், சுற்றுலா உட்பட சகல விடயங்களுக்கும் மீண்டெழும் அலைகள் என்ற தூர நோக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டு, கட்டியெழுப்படவுள்ளன. இதன்மூலம் யாழ்.மாவட்டம் மறுமலர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளின் திட்டத்தை கண்காணித்த பின்னர், தமது தரப்பிலுள்ள யோசனைகளையும் அமைச்சர் முன்வைத்தார். வளமானதொரு யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் பக்கபலமாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் விரிவுரையாளருமான சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles